எங்களை அறிந்துகொள்ளுங்கள்
காலநிலை வாரம் இந்தியா என்பது நாடு முழுவதும் மக்களின் பங்களிப்புடன் இயங்கும் காலநிலை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். இதை எந்த ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ நடத்துவதில்லை; அனைவரின் பங்களிப்பாலும் இது இயங்குகிறது. பொதுவான உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்ட அமைப்புகளும் தனிநபர்களும் இணைந்து உருவாக்கிய மக்கள் கூட்டணியே இதை முன்னெடுத்து வருகிறது.
கூட்டணியின் அனைத்து செயல்பாடுகளும் சமூக உடன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. அதையே அடிப்படையாகக் கொண்டு அதன் இலக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் ஒன்றுகூடும் போது ஒருவரையொருவர் எவ்வாறு மதிப்புடனும் பொறுப்புடனும் நடத்த வேண்டும் என்பதை நடத்தை நெறிமுறை விளக்குகிறது. இந்தக் கொள்கைகளுக்கு இணங்கும் எந்த வித அமைப்போ அல்லது தனிநபரோ கூட்டணியில் இணையலாம். சமூக உடன்பாடுகள் நோக்கங்கள் நடத்தை நெறிமுறை
இவை ஒவ்வொன்றும் மாதம் தோறும் எவ்வாறு உருப்பெற்றன என்பதை அறிய எங்களின் வலைப்பதிவு பக்கத்தில் நீங்கள் பின்தொடரலாம். வலைப்பதிவு
சமூக உடன்பாடுகள்
இந்த வழிகாட்டும் கொள்கைகள், 2025 ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற காலநிலை வார இணை அமைப்புகள் சந்திப்பில், சமூக உடன்பாடுகள் உருவாக்கும் செயல்முறையின் மூலம் வடிவமைக்கப்பட்டவை. இவற்றை கூட்டாகத் தொடர்ந்து செம்மைப்படுத்தும் பணியில் அனைத்து இணை அமைப்புகளும் பங்கேற்க அழைக்கப்படுகின்றன.
காலநிலை வாரத்தின் இணை அமைப்புகளாகிய நாங்கள், கூட்டாக பின்வருவனவற்றை ஏற்றுக்கொள்கிறோம்…
ஒவ்வொரு உடன்பாடும் இங்கு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. சமூகம் ஏற்றுக்கொண்ட அசல் உரையைப் பார்க்க, அதற்குரிய அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
-
நாங்கள் அனைவரையும் திறந்த மனதோடு வரவேற்கிறோம். குறிப்பாக, எப்போதுமே ஒதுக்கி வைக்கப்படுபவர்களை; ஏனெனில், நாம் பார்க்கத் தவறுகின்றவற்றை அவர்கள் தெளிவாகக் காண்கிறார்கள்! முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி பிரச்சினைகளையும் தீர்வுகளையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள, புதிய முகங்களையும், இதுவரை புறக்கணிக்கப்பட்ட தரப்பினரையும் நாம் ஒரே மேடையில் ஒன்றிணைப்போம்.
-
மக்களிடையே அச்சத்தை மட்டும் பரப்ப மாட்டோம். காலநிலைச் செய்திகள் கவலையை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒவ்வொரு காலநிலைச் சவாலை பற்றி பேசும்போது, நம்பிக்கையையும் மக்கள் நடைமுறையில் பின்பற்றக்கூடிய தீர்வுகளையும் இணைத்துப் பகிர்வோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி காலநிலை வாரத்தின் நிகழ்வுகளும் உள்ளடக்கங்களும், காலநிலைப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும். அத்தகைய ஒவ்வொரு தலைப்புடனும், நம்பிக்கையையும் செயல்படத் தூண்டும் வழிகளையும் இணைத்து, அந்தப் பதற்றத்தை சமநிலைப்படுத்த முயற்சிப்போம்.
-
காலநிலை வாரத்துடன் மட்டும் நின்றுவிடாமல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து உரையாடுவோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி காலநிலை வாரம், அனைத்து இணை அமைப்புகளின் பங்கேற்புடன், ஆண்டு முழுவதும் காலநிலை குறித்த உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.
-
நீடித்து நிலைக்கும் மாற்றத்தை உருவாக்குவோம். நிகழ்வுகள் முடிந்தாலும், சமூகமும் நமது பணியும் தொடர்ந்து வளரும். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி நிகழ்வுகளுக்கு அப்பாலும், இந்த அனுபவமும் அதற்கான இடமும் நீண்டகாலம் தொடரும் வகையில் கூட்டாகவும் நோக்கத்துடனும் செயல்படுவோம்.
-
நாங்கள் எதையும் தெளிவாக எடுத்துரைப்போம். கேட்பவர்களின் நிலையறிந்து விஷயங்களை எளிமைப்படுத்துவோம்; உங்களுடைய கேள்விகளை நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி பங்கேற்பாளர்களின் தேவைகளையும் புரிதலையும் கருத்தில் கொள்வோம். தேவையான இடங்களில் தலைப்புகளை எளிமையாக விளக்குவோம்; கேள்விகளையும் மனமுவந்து வரவேற்போம்.
-
எளிய மொழியில் பேசுவோம். குழப்பமூட்டும் தொழில்நுட்பச் சொற்களைத் தவிர்ப்போம். No confusing jargon. முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி முடிந்தவரை தொழில்நுட்பச் சொற்களைத் தவிர்ப்போம்.
-
நாம் இணைந்து வகுத்த திட்டத்தைப் பின்பற்றுவோம். ஒன்றாக உருவாக்கிய இலக்குகள், விதிமுறைகள் மற்றும் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்போம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி கூட்டாக உருவாக்கப்பட்ட காலநிலை வாரம் இந்தியா 2025-இன் இலக்குகள், நடத்தை நெறிமுறை மற்றும் சமூக உடன்பாடுகளின்படி நிகழ்வுகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
-
நம்மிடம் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நிகழ்விடங்கள், தேவையான பொருட்கள், உதவிக்கரங்கள் ஆகியவற்றை அனைவருக்கும் ஏற்ற வகையில் பகிர்வோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி நிகழ்விடங்கள், சேவை வழங்குநர்கள், பொருட்கள் போன்ற வளங்களை, அனைத்து அமைப்பினரும் அணுகக்கூடிய வகையில், ஒத்துழைப்புடன் பகிர்ந்து பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
-
நமது கவனம் காலநிலையின் மீதே இருக்கும். உரையாடல்களும் அதனை மையமாகக் கொண்டே அமையும். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி காலநிலை உரையாடல்களிலேயே கவனம் செலுத்துவோம். முடிந்தவரை காலநிலைச் சிக்கல்களை மையப்படுத்தியே செயல்படுவோம்.
-
சமூகம், இயற்கை, மற்றும் பூமியின் நலனைப் பேணுவதிலேயே நமது கவனத்தைச் செலுத்துவோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி உரையாடல்கள் சமூகம், சூழலியல், மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறுவதை உறுதிசெய்வோம்.
-
யாரையும் குற்றம் சாட்டவோ அவமானப்படுத்தவோ மாட்டோம். தனி நபரையோ குழுவையோ குறிவைத்து பழிபோட மாட்டோம். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி காலநிலை வாரம் இந்தியா 2025இன் உரையாடல்களும் தகவல் பரிமாற்றங்களும், தனிநபரையோ குழுக்களையோ பெயரிட்டு குற்றம் சாட்டும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படாது.
-
சமூகங்களுக்கே முதன்மை அளிப்போம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சமத்துவத்திலும் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியை இணைந்து முன்னெடுக்கின்றன. முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி கூட்டமைப்பின் அடிப்படை கோட்பாடுகளே காலநிலை வாரம் இந்தியா 2025-இன் அடித்தளம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சமூக நீதியிலும் உறுதிபூண்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இதை முன்னெடுக்கின்றன.
-
உள்ளூர் மக்களின் தலைமையை முன்னிறுத்துவோம். அனைவரையும் இணைத்து, பொறுப்புகளைப் பகிர்ந்து செயல்படுவோம். ஏனெனில், தங்கள் சமூகத்தின் தேவைகளை உள்ளூர் மக்களே சிறப்பாகப் அறிந்திருப்பார்கள். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி ஒத்துழைப்பு, அனைவரையும் அரவணைக்கும் அணுகுமுறை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வை முன்னிலைப்படுத்தி, எங்கள் சமூகங்களின் தனித்துவமான தேவைகளையும் பலங்களையும் பிரதிபலிக்கும் தீர்வுகளை உள்ளூர் மக்களே முன்னின்று உருவாக்கி வழிநடத்த வலுப்படுத்துகிறோம்.
-
அனைவருக்கும் சமமான வாய்ப்பு. எங்கள் காலநிலைச் செயல்திட்டங்கள் பூமிக்கு நன்மை பயப்பதுடன், அனைவரும் எளிதாக பங்கேற்கக்கூடியதாகவும், உள்ளூர் மக்களின் அறிவையும் அனுபவத்தையும் மதித்து உருவாக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி இந்த வாரம், கூட்டு நடவடிக்கையின் உணர்வை வலுப்படுத்தி, காலநிலைச் செயல்திட்டங்கள் நிலைத்தன்மை வாய்ந்ததாக மட்டுமல்லாமல், சமத்துவமானதாகவும், அனைவரும் எளிதாகப் பங்கேற்கக்கூடியதாகவும், உள்ளூர் மக்களின் அறிவு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைய வழிவகுக்கும்.
-
உரையாடவும், கற்றுக்கொள்ளவும், புதுமையான யோசனைகளை ஒன்றாக உருவாக்கவும் ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஏனெனில், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் குரலே மாற்றத்தை வழிநடத்த வேண்டும். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படி ஒன்றிணைந்து, உரையாடல், கற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை நாம் உருவாக்கி வருகிறோம். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மக்களே மாற்றத்தை உருவாக்கும் காலநிலை நடவடிக்கைகளின் முன்னோடிகளாக இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியை இது வெளிப்படுத்துகிறது.
நோக்கங்கள்
2025 மே மாதத்தில் காலநிலை வாரம் இந்தியா பங்கேற்பாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட இலக்குகள். இவை பங்கேற்பாளர்களின் ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை.
ஒவ்வொரு இலக்கும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இங்கே வழங்கப்பட்டுள்ளது. அசல் உரையைப் பார்க்க, அந்த இலக்கத்தின் அருகிலுள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
-
உள்ளூரில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் காலநிலை முயற்சிகளை முன்னிலைப்படுத்துவோம்.இந்தியா முழுவதும் பலர், குறிப்பாக இளைஞர்கள், குறைந்த வளங்களுடனேயே அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் முயற்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம். அசல் உரை உள்ளூர் காலநிலைத் தீர்வுகளை உலகறியச் செய்து கொண்டாடுவோம். காலநிலை நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளூர் முயற்சிகள் மற்றும் புதிய முயற்சிகளை முன்னிலைப்படுத்தி, இளைஞர்களின் தலைமையையும் பங்கேற்பாளர்களால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் அங்கீகரிப்போம்.
-
மக்கள் காலநிலை மாற்றத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவோம்.விரிவுரைகள் மட்டுமல்ல; உரையாடல்கள், இயற்கை நடைபயணங்கள், திரைப்படங்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்ற பல்வேறு அனுபவங்களின் மூலம், மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைத் தாங்களே தீர்மானிக்க வழிவகுப்போம். அசல் உரை காலநிலை குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் வளர்ப்போம். மக்களுடன் இணைந்து செயல்பட்டு, காலநிலை குறித்த அறிவைப் பகிர்ந்து, கலந்துரையாடல்கள் மற்றும் கல்வி சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் தகவலறிந்த காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் காலநிலைப் புரிதலை மேம்படுத்துவோம்.
-
பொதுவாக ஒன்றாக உரையாட வாய்ப்பு இல்லாத பல்வேறு தரப்பினரை ஒரே தளத்தில் இணைப்போம்.விவசாயிகள், அறிவியலாளர்கள், மாணவர்கள், நகராட்சி நிர்வாகிகள், கலைஞர்கள், பொறியாளர்கள் என ஒவ்வொருவரும் தனித்துவமான அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளனர். அந்தப் பல்வேறு பார்வைகளும் அனுபவங்களும் ஒன்றிணையும்போதுதான் புதிய சிந்தனைகள் உருவாகி, பயனுள்ள காலநிலைத் தீர்வுகள் பிறக்கின்றன. அசல் உரை பல்வேறு தரப்பினரிடையே உரையாடலையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவோம். பல்வேறு திறன்கள், அனுபவங்கள், குழுக்கள் மற்றும் துறைகளை இணைத்து, வெளிப்படையான உரையாடல், அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டாகத் தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவோம்.
-
மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும், அதன் பிறகும் தொடர்பில் தொடரவும் உதவுகிறோம்.நிகழ்வு முடிந்தாலும், உருவான உறவுகள் தொடர வேண்டும். எங்கள் நோக்கம் — அமைப்புகளுக்கிடையில் 100 புதிய பணிசார் நட்புறவுகளை உருவாக்குவது; ஒருவரையொருவர் அறிந்துகொள்ள 1,000 பேரை இணைப்பது; மேலும், ஐந்து நகரங்களில் குறைந்தது 10 பேர் இந்த முயற்சியை உள்ளூர் அளவில் ஒருங்கிணைத்து முன்னெடுப்பது. அசல் உரை தொலைநோக்குடைய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் 100 புதிய ஒத்துழைப்பு உறவுகளை உருவாக்கி வலுப்படுத்துதல், 1,000 புதிய தொடர்புக்களை ஏற்படுத்துதல், மேலும் 5 நகரங்களில் குறைந்தது 10 காலநிலை வாரத் தூதுவர்களின் குழுக்களை உருவாக்குதல்.
-
செயலில் இறங்குவதை எளிதாக்குவோம்பிரச்சினைகளைப் பற்றி கேட்டு கவலையுடன் வீடு திரும்புவதற்காக மட்டும் அல்ல. ஒரு தனிநபராகவோ, பள்ளியாகவோ, நிறுவனமாகவோ, அல்லது உங்கள் அக்கம்பக்கச் சமூகமாகவோ இணைந்து செயல்பட, உருவாக்க, மரம் நட, சீரமைக்க, கருத்துகளைப் பகிர்ந்து விவாதிக்க, அல்லது முன்னெடுத்து ஒருங்கிணைக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம். அசல் உரை மக்கள் பங்கேற்பையும் செயல்பாட்டையும் வலுப்படுத்துதல் குடிமக்கள், நிறுவனங்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளை இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களில் பங்கேற்கச் செய்து, காலநிலைச் செயல்பாட்டை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்லுதல்.
-
மக்களின் குரலை முடிவெடுப்போரிடம் கொண்டு சேர்த்தல்பல்வேறு இடங்களில் நடைபெற்ற உரையாடல்களில் வெளிப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை கொள்கை வகுப்போரிடம் கொண்டு சேர்க்கிறோம். இதன் மூலம், எடுக்கப்படும் முடிவுகள் அவற்றின் விளைவுகளை நேரடியாக அனுபவிக்கும் மக்களின் குரலையும் தேவைகளையும் பிரதிபலிக்கின்றன. அசல் உரை கொள்கை மாற்றங்களுக்காக மக்களின் ஒருங்கிணைந்த குரலை வலுப்படுத்துதல் பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைந்த கருத்துகள், அனுபவங்கள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கும் ஒரு விரிவான ஆவணத்தை இணைந்து உருவாக்கி, அதை ஜனவரி 2026க்குள் கொள்கை முடிவெடுப்பவர்களிடம் சமர்ப்பித்து, எதிர்கால காலநிலை கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை வடிவமைப்பதில் முக்கியத்துவமிக்க பங்களிப்பை வழங்குதல்.
நடத்தை நெறிமுறை
ஒன்றிணைந்து, பாதுகாப்பாக, மதிப்புடன், காலநிலை நடவடிக்கைகளில் அனைவரும் சுதந்திரமாக பங்கேற்க ஊக்கமும் அதிகாரமும் உள்ள சூழலை நாம் உருவாக்குகிறோம். இந்த நெறிகளை செயல்படுத்துவதன் மூலம், காலநிலை வார இந்தியா நிகழ்வை அனைவருக்கும் நேர்மறையான, அர்த்தமுள்ள மற்றும் மாற்றத்தை உருவாக்கும் அனுபவமாக மாற்றுகிறோம். காலநிலை வார இந்தியா நிகழ்வுக்காக நாம் இணைந்து உருவாக்கிய நடத்தை நெறிமுறை கீழே வழங்கப்பட்டுள்ளது.
முழு விவரங்களைப் பார்க்க, தேவையான தலைப்பின் அருகில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
-
பொதுவான நடத்தை நெறிமுறை காலநிலை வார இந்தியா நிகழ்வில், பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான, பரஸ்பர மரியாதை நிறைந்த சூழலை உருவாக்கும் உறுதியுடன் நாம் ஒன்றிணைகிறோம். ஒரு சமூகமாக, நமது வார்த்தைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் அனைவரின் அனுபவத்தையும் வடிவமைக்கின்றன என்பதை உணர்ந்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் பின்வரும் கொள்கைகளைப் பிரதிபலித்து, அவற்றை நமது நடத்தையின் அடிப்படை மதிப்புகளாகக் கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ளோம்.
-
பாகுபாடற்ற அணுகுமுறை மற்றும் மரியாதை நாம் ஒருவரையொருவர் மரியாதை, கண்ணியம் மற்றும் பரிவுடன் அணுகுகிறோம். வயது, பாலினம், இனம், பாலியல் நோக்கு, திறன், மதம் மற்றும் சமூகப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள், அனுபவங்கள் மற்றும் பார்வைகளைக் கொண்ட நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை மதித்து வரவேற்கிறோம். நேரிலோ அல்லது இணையவழியிலோ எந்தவொரு வடிவிலான துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல், அச்சுறுத்தல் அல்லது பாகுபாட்டிற்கும் இடமளிக்க மாட்டோம். புண்படுத்தும் கருத்துகள், மிரட்டல், விரும்பத்தகாத அணுகுமுறைகள் அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் இல்லாத பாதுகாப்பான, மரியாதைமிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை நமது வார்த்தைகளும் செயல்களும் வெளிப்படுத்துகின்றன. ஒன்றிணைந்து, ஒவ்வொருவரும் மதிக்கப்படுகிறோம், ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் மற்றும் நமது குரல்கள் கேட்கப்படுகின்றன என்று உணரும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்குகிறோம்.
-
பாதுகாப்பான மற்றும் மரியாதைமிக்க பங்கேற்பு வரவேற்கத்தக்க, பாதுகாப்பான மற்றும் அனைவருக்குமான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும். பகைமை, அச்சுறுத்தல் அல்லது பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு நடத்தைக்கும் இங்கு இடமில்லை. நாம் ஒருவருக்கொருவர் அக்கறையுடன் செயல்பட்டு, சிரமம் அல்லது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் ஒருவரைக் கண்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாகப் பங்கேற்று, கற்றுக்கொண்டு, இணைந்து செயல்படக்கூடிய சூழலை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்.
-
தொழில்முறை நடத்தை நேர்மையும் ஒருமைப்பாடும் நமது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன. நேரக் கட்டுப்பாடுகள், பொருட்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் அமர்வு விதிமுறைகளை நாம் மதித்து பின்பற்றுகிறோம். அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் இணங்கி, ஏற்பாட்டாளர்கள் மற்றும் பணியாளர்களின் வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைத்து, அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறோம்.
-
சுற்றுச்சூழல் மீதான பொறுப்பு காலநிலையை மையமாகக் கொண்ட சமூகமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் முன்னுதாரணமாக செயல்படுகிறோம். கழிவுகளை குறைத்து, குப்பைகளை முறையாக நிர்வகித்து, இயன்றவரை நிலைத்தன்மைமிக்க நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம். நமது செயல்கள் பூமியின் மீதான நமது கூட்டு பொறுப்புணர்வை பிரதிபலிக்கின்றன.
காலநிலை வார இந்தியாவில் பங்கேற்பதன் மூலம், இந்த மதிப்புகளைப் பின்பற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, அனைவருக்கும் பாதுகாப்பான, நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள அனுபவத்தை உருவாக்குவதில் நமது பங்களிப்பை வழங்குகிறோம்.